தஞ்சையில் மாவட்ட கேரம் விளையாட்டு போட்டி 19-ந் தேதி நடக்கிறது

தஞ்சையில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

Update: 2019-10-12 22:15 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சை மாவட்ட விளையாட்டு பிரிவின் மூலம் வருகிற 19-ந் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இளநிலை பிரிவு, முதுநிலை பிரிவு ஆகிய பிரிவுகளில் நடக்கிறது.

இளநிலை பிரிவில் மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமிகளும், முதுநிலை பிரிவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். மாணவ, மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழுடன் வர வேண்டும்.

ஆன்லைன் மூலம் பதிவு

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில்(www.sdat.tn.gov.in) ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவர். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படாது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மட்டுமே மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்