காட்ரம்பாக்கம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்ரம்பாக்கம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-10-13 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலகம் இயங்கி வந்தது. இந்த நூலகத்தில் காட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகத்திற்கு சென்று படித்து பயன் பெற்று வந்தனர்.

ஆனால் நீண்ட நாட்களாக இந்த நூலகம் பூட்டி கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் நூலக கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து செடிகள் முளைத்து, பூச்சிகள் மற்றும் விஷ வண்டுகள் சுற்றி திரியும் மோசமான நிலையில் காணப்படுகிறது. 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை வளர்த்து கொள்ள நூலகம் மிக அவசியமானதாகும்.

எனவே நூலகத்தை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்