திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம் சங்கிலி பறிக்க முயற்சி

திருச்சியில் கல்லூரி மாணவி உள்பட 2 பெண்களிடம், வாலிபர்கள் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

Update: 2019-10-13 22:15 GMT
திருச்சி,

திருச்சி பெரியமிளகு பாறையை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி கல்பனாதேவி(வயது 45). இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி கே.கே.நகர் சாலையில் காஜாமலை காலனி அருகே ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்து இருந்த நபர், கல்பனாதேவி அணிந்து இருந்த 12 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்து பறிக்க முயன்றார். ஆனால் சங்கிலி அறுபடவில்லை.

சங்கிலியை பிடித்து இழுத்த வேகத்தில் கல்பனாதேவி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அந்த பகுதியினர் ஓடி வந்தனர். இதனால் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவி

இதேபோல் நெய்வேலி இந்திராநகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் கவிதா(18). கல்லூரி மாணவியான இவர் நேற்று முன்தினம் காலை வயலூர்ரோட்டில் குமரன் நகர் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், கவிதா கழுத்தில் அணிந்து இருந்த ½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அவர் நொடிப்பொழுதில் நகர்ந்து கொண்டார். இதனால் சங்கிலியை பறிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து உறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்