பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஜெயங்கொண்டத்தில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் பேரிடர் தணிப்பு துறையினர் ஒன்றிணைந்து பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர்.

Update: 2019-10-14 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறையினர், கல்வித்துறையினர் மற்றும் பேரிடர் தணிப்பு துறையினர் ஒன்றிணைந்து பேரிடர் தணிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்திற்கு ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தவேல் தலைமை தாங்கினார். உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஹரி செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் இடி, மின்னலின் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இடி இடிக்கும்போது மரத்தடியில் நிற்க கூடாது. நிலநடுக்க அறிகுறி தென்பட்டால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி திறந்தவெளியில் நிற்க வேண்டும். மழைக்காலங்களில் கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் தா.பழூர் சாலை, கடைவீதி, பஸ் நிறுத்தம் சாலை, திருச்சி சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் கோட்டக்கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்