தேனி, வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்ய போலி நகைகள் தயாரித்து கொடுத்தவர் கைது

வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்ய போலி நகைகளை தயாரித்து கொடுத்த சின்னாளபட்டியை சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-18 22:00 GMT
தேனி,

தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகசெல்வி (வயது 49). இவர், தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 பவுன் எடையுள்ள 8 தங்க வளையல்களை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

நகைகளை அடகு வைத்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் அவர் நகைகளை திருப்பவில்லை. இதையடுத்து அடகு வைத்த நகைகளை பரிசோதித்த போது, அவை அனைத்தும் தங்கமுலாம் பூசப்பட்ட போலியானவை என்று தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி முதன்மை மேலாளர் இளங்கோ மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். அதன்பேரில், கற்பகசெல்வி மீது போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய கற்பகசெல்வி இதேபோன்று தேனியில் உள்ள மேலும் சில வங்கிகளில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு, தேனி போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில் கற்பகசெல்வி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த உமாதேவி என்பவரையும் போலீசார் கடந்த மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் விசாரணை நடத்தினார். விசாரணையில், சின்னாளபட்டியை சேர்ந்த முத்துச்சவுரியன் மகன் ராமச்சந்திரன் (36) என்பவர் போலி நகைகளை தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ராமச்சந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்