ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது; லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வில்லிவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-10-23 23:45 GMT
செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. நிலம் விற்பனை சம்பந்தமாக இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சுமார் ரூ.18 லட்சம் தரவேண்டியது இருந்ததாகவும், ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக பிரபாகரன் மீது வில்லிவாக்கம் குற்றப்பிரிவு போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழழகன், இருவரையும் அழைத்துப்பேசினார்.

அப்போது பிரபாகரனிடம், சுப்பிரமணிக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சமும், அடுத்தடுத்து தவணை முறையில் மீதி பணத்தையும் கொடுக்கவேண்டும் என இன்ஸ்பெக்டர் தமிழழகன் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு ரூ.20 ஆயிரத்தை லஞ்சமாக தரும்படி பிரபாகரனிடம், இன்ஸ்பெக்டர் தமிழழகன் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபாகரன், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்தை பிரபாகரனிடம் கொடுத்து அதை லஞ்சமாக இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

பின்னர் பிரபாகரன், லஞ்ச பணத்தை எங்கு வந்து தரவேண்டும்? என இன்ஸ்பெக்டரிடம் போனில் கேட்டார். அதற்கு அவர், அண்ணாநகரில் உள்ள போலீஸ் குடியிருப்பு அருகே வரும்படி கூறினார்.

அதன்படி நேற்று பணத்துடன் அங்கு சென்ற பிரபாகரன், இன்ஸ்பெக்டர் தமிழழகனிடம் அதை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பாய்ந்து சென்று இன்ஸ்பெக்டர் தமிழழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரை அண்ணாநகர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்