‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான டாக்டர் வெங்கடேசன் தேனி கோர்ட்டில் ஆஜர்

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு அடுத்தமாதம் 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-10-24 23:00 GMT
தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றிய வெங்கடேசன், அவருடைய மகன் உதித்சூர்யா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்து இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் உதித்சூர்யாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கடந்த மாதம் 26-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் வெங்கடேசன் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு நீதிமன்ற காவல் முடிவடைய இருந்த நிலையில், அவரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதற்காக அவரின் முகத்தை துணியால் மூடியபடி போலீசார் அழைத்து வந்தனர்.பின்னர், டாக்டர் வெங்கடேசனுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி வரை காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்