கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-10-30 22:45 GMT
பெரம்பலூர்,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு டாக்டர்களின் பணி இடங்களை அதிகரிக்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வேப்பூர், காரை, கிருஷ்ணபுரம், அம்மாபாளையம் ஆகிய வட்டார மருத்துவமனை மற்றும் 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் டாக்டர் அறிவழகன் தலைமையில் நேற்று கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்