விவசாயி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update:2019-11-01 04:30 IST
கரூர்,

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா நாதிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சின்னக்காளைக்கும் (30) கடந்த சில ஆண்டுகளாக நடைபாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் அப்பகுதியிலுள்ள கொசூர் கடைவீதியில் கடந்த 2017-ம் ஆண்டு பொன்னம்பலத்துக்கும், சின்னக் காளைக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னக்காளை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னம்பலத்தை வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னக்காளையை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கு, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்ததால், நேற்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சின்னக்காளைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் வேனில் அழைத்து சென்று, சின்னக்காளையை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்