அரசின் அடக்குமுறைகளை கண்டு போராட்டத்தை கைவிட மாட்டோம் கரூரில் டாக்டர்கள் அறிவிப்பு

அரசின் அடக்குமுறைகளை கண்டு போராட்டத்தை கைவிட மாட்டோம் என கரூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.;

Update:2019-11-01 04:30 IST
கரூர்,

அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பு பணியிடங்களுக்கு முறையான வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும், காலமுறை ஊதிய உயர்வு-பதவி உயர்வு வழங்கிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை அரசு மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கரூர் அரசு மருத்துவமனையில் நேற்று 7-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிவராமன் தலைமை தாங்கினார்.

கைவிட மாட்டோம்

இந்த போராட்டம் குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், கரூர் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுகிற டாக்டர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தொடர் வேலை நிறுத்தத்தில் உள்ளனர். நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கையை கையாண்டுள்ளனர். இதுபோன்ற அரசின் அடக்குமுறைகளை கண்டு போராட்டத்தை கைவிட மாட்டோம். மாநில நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதன் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றார். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கரூர் அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் அமர்ந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்