சின்னமனூரில் பரபரப்பு: போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு?

சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-01 22:45 GMT
சின்னமனூர், 

தேனி மாவட்டம் சின்னமனூரில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியில் இருந்தனர். அவர்களில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் குறைந்த எண்ணிக்கையில் போலீஸ் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீஸ் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, போலீஸ் நிலைய வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசவில்லை. நள்ளிரவு 2 மர்ம நபர்கள் 2 பீர் பாட்டில்களை வீசினர். சத்தம் கேட்டு போலீசார் சென்று பார்த்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம் என்றனர். 

மேலும் செய்திகள்