சுரண்டையில், மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி

சுரண்டையில் மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-11-01 22:30 GMT
சுரண்டை,

நெல்லை மாவட்டம் சுரண்டை அழகாபுரிபட்டணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஆனந்தசேகர். இவர் தென்காசி தாலுகா அலுவலகத்தில் தலைமை சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் வேல்ராஜன் (வயது 22). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் வேல்ராஜன் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். தீபாவளிக்கு மறுநாள் அவருக்கு திடீரென்று மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. அவர் உள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு காய்ச்சல் சரியானது.

கடந்த 30-ந்தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மறுநாள் அவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வேல்ராஜன் பரிதாபமாக இறந்தார்.

மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்