உசிலம்பட்டி அருகே பரிதாபம்: அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு

அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண் சில நாட்களில் திடீரென உயிரிழந்தார். தவறான சிகிச்சையே காரணம் என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-11-02 23:30 GMT
உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ளது தொட்டப்பநாயக்கனூர். இந்த ஊரை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா(வயது 23). இவர் கடந்த 18-ந்தேதி 2-வது பிரசவத்திற்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அறுவை சிகிச்சையின் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பின்பு சிகிச்சை முடிந்து 26-ந்தேதி வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சைக்கான தையல் பிரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் தீபா திடீரென மயங்கி விழுந்தார். சுயநினைவு இல்லாத நிலையில் அவரை தொட்டப்பநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்பு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு தீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

பிரசவம் நடந்த சில நாட்களிலேயே தீபா இறந்துபோனதற்கு தவறான சிகிச்சைதான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாகத்தான் தீபா வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரது உணவு முறை மாறியதாலோ, கவனமாக இல்லாமல் தடுமாறி கீழே விழுந்திருந்தாலோ இதுபோன்று நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு அளிக்கப்பட்ட முறையான சிகிச்சையால்தான் தாயும், சேயும் நலமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்” என்று கூறினார்கள்.

இந்தநிலையில் மருத்துவமனையில் இறந்த தீபா உடலை பரிசோதனை செய்து தர காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் மருத்துவமனை எதிரில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.

மேலும், தீபாவின் தந்தை முத்தையா கொடுத்த புகாரின்பேரில் உசிலம்பட்டி தாலுகா போலீசார், தீபா மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்