மழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால், குட்டைப்போல் காட்சியளிக்கும் குடகனாறு அணை

மழை பெய்தும் நீர்வரத்து இல்லாததால் குடகனாறு அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது.

Update: 2019-11-03 22:00 GMT
வேடசந்தூர், 

பழனி மலை அடிவாரத்தில் தொடங்கும் குடகனாறு ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக பயணித்து கரூர் மாவட்டம் மூலப்பட்டி அமராவதி ஆற்றில் கலக்கிறது. மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் குடகனாற்றில் கலக்கிறது.

வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்காக அழகாபுரியில் 15 ஷட்டர்கள் கொண்ட குடகனாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையால் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலமும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இதுமட்டுமின்றி அணையை சுற்றியுள்ள பாலப்பட்டி, காசிபாளையம், விருதலைப்பட்டி, கூவக்காபட்டி கூம்பூர் ஊராட்சிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயரும். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் அணை வறண்டு கிடந்தது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை திண்டுக்கல் மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது. இதன்மூலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின.

ஆனால் குடகனாறு அணை நீர்வரத்து இல்லாததால் குட்டைப்போல் காட்சியளிக்கிறது. அணைக்கு தண்ணீர் முழுமையாக வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே ஆற்றில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றவேண்டும், அணையை தூர்வாருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்