சிதம்பரத்தில், தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை

சிதம்பரத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-03 22:15 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் மந்தகரை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி(வயது 22). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்தநிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றும் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் வினோத் வேலைக்கு சென்றதாக தெரிகிறது.

இதற்கிடையே வீட்டில் மனமுடைந்து இருந்த அபிராமி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்