படகு மூலம் கடத்த முயன்ற ரூ.3½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு

காரைக்கால் கடற்கரை கிராமத்தில் படகு மூலம் கடத்த முயன்ற ரூ.3½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-07 22:45 GMT
காரைக்கால்,

காரைக்கால் மேடு அம்மன் கோவில்பத்து கடற்கரை கிராமத்தில் நேற்று இரவு 1 மணி அளவில் ரூ.3½ லட்சம் மதிப்பிலான 6 ஆயிரத்து 500 மது பாட்டில்கள், 136 அட்டை பெட்டிகளில் மூடி படகு மூலம் தமிழக மாவட்டங்களுக்கு கடத்துவதற்காக, கடற்கரை மணலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை, அந்த பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து, அந்த வீடியோவை காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசாருக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கடற்கரை மணலில் அடுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

படகு மூலம் கடத்த...

விசாரணையில் காரைக்கால் மேட்டை சேர்ந்த நிஜித்குமார் (வயது 36) என்பவர் அதே பகுதியில் ஒரு வீட்டில் கடந்த பல நாட்களாக மதுபாட்டில்களை வாங்கிவந்து சேர்த்து படகு மூலம் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய நிஜித்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மாவட்ட கலால்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுபோல் படகு மூலம் மது கடத்தல் காரைக்காலில் அதிகரித்து வருவதால், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தடுக்க வேண்டும். என அந்தபகுதி இளைஞர்கள் போலீசாரை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்