மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 பேருக்கு வாந்தி-மயக்கம்

மன்னார்குடி அருகே பல்லி விழுந்த டீயை குடித்த 30 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.

Update: 2019-11-07 23:00 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள தென்கரைவயல் கிராமத்தில் விவசாயி ஒருவரது வயலில் நடவு பணி நடைபெற்று வந்தது. இந்த நடவு பணியில் 30-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் நடவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தென்கரைவயலில் உள்ள ஒரு டீக்கடையில் வாங்கி வரப்பட்ட டீயை குடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் டீ குடித்த தொழிலாளர்கள் 30 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதியில் இருந்த மற்ற தொழிலாளர்கள், வயல் உரிமையாளர்கள் அவர்களை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணை

இதில் முத்துலட்சுமி (வயது 54), சரஸ்வதி (40), சரோஜா (35), முத்துக்கண்ணு (40), ரமணி (36), வீராச்சாமி (55), பாஸ்கர் (38) ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் டீக்கடையில் வாங்கி வரப்பட்ட டீயில் பல்லி விழுந்து கிடந்ததும், அதனை குடித்ததால் தொழிலாளர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.

மேலும் செய்திகள்