தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு, தெருக்களில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம்
தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.;
தேனி,
தேனி அல்லிநகரம் நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்டது காந்தி நகர். இந்த பகுதியில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகள் கேட்டும், பாதாள சாக்கடை திட்டத்தில் இப்பகுதியை முழுமையாக இணைக்கவும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு, காந்தி நகரில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் நேற்று கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘போதிய தெரு விளக்கு வசதி இல்லை. தெருக்களில் முறையான கழிவுநீர் வாய்க்கால் இல்லை. பாதாள சாக்கடை திட்டத்திலும் இப்பகுதி முழுமையாக இணைக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. மேலும், இப்பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை தொடர்ந்து நடக்கிறது. அதை முற்றிலும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. எனவே, கருப்புக்கொடி கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தீர்வு கிடைக்காவிட்டால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் முன்பு கருப்புக்கொடிகளை அகற்ற மாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால், தொடர்ந்து மக்கள் தெருக்களில் கருப்புக்கொடிகளை கட்டி இருந்தனர்.