நடத்தையில் சந்தேகம், 6 குழந்தைகளின் தாய் கத்தியால் குத்திக்கொலை - கணவர் கைது

வாணியம்பாடி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-13 22:45 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் கிராமத்தை சேர்ந்தவர் இர்ஷாத்கான் (வயது 32). அவருடைய மனைவி ஷபானா (29). இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இர்ஷாத்கான் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இர்ஷாத்கான் ஊருக்கு வந்தார். அப்போது இருந்தே அவருக்கு மனைவி ஷபானா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இர்ஷாத்கான் மது அருந்திவிட்டு, போதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரமடைந்த இர்ஷாத்கான், ஷபானாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த ஷபானாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இர்ஷாத்கானை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்