கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

“கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2019-11-13 22:15 GMT
மதுரை, 

கேரள மாநிலம் அகழிக்காடு பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். அதில் சேலத்தை சேர்ந்த மணிவாசகம் என்பவரும் பலியானார். அவரை அடையாளம் காண, கேரள போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று அன்பரசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோருக்கு பரோல் அளிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையே என்கவுன்ட்டரில் மணிவாசகம் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்தபின், கலா, சந்திரா ஆகியோருக்கு பரோல் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மணிவாசகம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து சில உத்தரவுகளை பாலக்காடு கோர்ட்டுக்கு கேரள ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. அதன்படி, மணிவாசகத்தின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யலாம் என்று கூறியுள்ளது. ஆனால் அவரது உறவினர் என்பதற்கான ஆதாரங்களை எங்களிடம் போலீசார் கேட்கின்றனர். இதனால் அவரது உடலை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “மணிவாசகத்தின் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேவையற்ற ஆதாரங்களை கேட்டு தாமதப்படுத்தக்கூடாது. அவரது உடல், கேரளாவில் இருந்து சேலம் வந்த பின், அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும். உடலுக்கு தேவையான பாதுகாப்பை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அளிக்க வேண்டும். பின்னர் அவரது மனைவி, சகோதரிக்கு பரோல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என உத்தரவிட்டனர்.

வழக்கை இன்றைக்கு (14-ந் தேதி) ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்