நாகர்கோவில் அருகே விபத்து, கல்லூரி மாணவர் பலி
நாகர்கோவில் அருகே நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில்,
நாகர்கோவிலை அடுத்த தெற்கு திருப்பதிசாரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் அபிஷேக் (வயது 18). இவர் தென்தாமரைகுளத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவர் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நாகர்கோவில் அருகே தேரேக்கால்புதூர் பகுதியில் வரும்போது முன்னால் சென்ற டெம்போ மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட அபிஷேக் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.