தேனியில் அடிப்படை வசதி கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி 2-வது நாளாக போராட்டம்
தேனியில் அடிப்படை வசதிகள் கேட்டு தெருக்களில் கருப்புக்கொடி கட்டி 2-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
தேனி,
தேனி அல்லிநகரம் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட காந்தி நகரில் உள்ள தெருக்களில் நேற்று முன்தினம் மக்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி, பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைப்பு, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
அல்லிநகரம் போலீசார் நேற்று முன்தினம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் கருப்புக்கொடிகளை அகற்ற மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தது. மக்கள் தங்களின் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘அடிப்படை வசதிகள் கேட்டு பல முறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால், கருப்புக்கொடி கட்டியுள்ளோம். ஆனால், உயர் அதிகாரிகள் யாரும் எங்கள் பகுதியை வந்து பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்கவரவில்லை. இதனால், போராட்டத்தை தொடர்கிறோம். அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உறுதி அளித்தால் கருப்புக்கொடிகளை அகற்றுவோம். அதுவரை தெருக்களில் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருக்கும்’ என்றனர்.