சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் இருக்கையின் அடியில் 3 கிலோ தங்கம் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் சிக்கியது. அதனை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2019-11-15 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். அதன் பின்னர் விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்ய வந்தனர்.

அப்போது விமானத்தில் ஒரு இருக்கையின் அடியில் பொட்டலம் இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் இது குறித்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் அதிகாரிகள் வந்து பொட்டலத்தை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

அதில் சுமார் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்தது. அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்மநபர்கள் விமான நிலையத்தில் அதிகாரிகள் பரிசோதனைக்கு பயந்து அதனை விமானத்தின் இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் தங்கத்தை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்