அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு: உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம்

அரிசிக்கு பதிலாக பணம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உணவு பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தினார்கள்.

Update: 2019-11-20 23:00 GMT
புதுச்சேரி,

ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு மாற்றாக பணம் வழங்குவதை கைவிட வேண்டும், மூடிக்கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கவேண்டும், பொது வினியோக முறையை பலப் படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை புதுச்சேரி உணவு பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி வருகி்ன்றது.

அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மிஷன்வீதி-நேரு வீதி சந்திப்பில் அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து புதுவை தலைமை தபால் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

ஊர்வலத்துக்கு ஜனநாயக மாதர் சங்க தலைவி சந்திரா தலைமை தாங்கினார். சமம் சுயசார்பு இயக்க செயற்குழு உறுப்பினர் சந்திரவதனி, பிரதேச குழு உறுப்பினர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும் செய்திகள்