விடாது துரத்திய மரணம்: வி‌‌ஷம் குடித்ததில் உயிர் பிழைத்த என்ஜினீயர், சுடுகாட்டில் தூக்குப்போட்டு தற்கொலை

வி‌‌ஷம் குடித்ததில் உயிர் பிழைத்த என்ஜினீயர், சுடுகாட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-21 22:15 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மாட்டுச்சந்தை அருகே சுடுகாடு உள்ளது. நேற்று காலை அங்குள்ள ஒரு மரத்தில் சேலையில் தூக்குப்போட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் லெட்சுமணன், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து பட்டுக்கோட்டை நகர போலீசார் விரைந்து வந்து சுடுகாட்டில் மரத்தில் தூக்கில் தொங்கியவரின் உடலை கீழே இறக்கி அவரது உடலில் சோதனையிட்டனர். அப்போது அவருடைய சட்டைப்பையில் செல்போன் ஒன்று இருந்தது.

என்ஜினீயர்

அந்த செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் தூக்கில் பிணமாக தொங்கியவர் நாகேந்திரன்(வயது 28), பட்டுக்கோட்டை கோட்டை அல்லாகோவில் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் என்று தெரிய வந்தது. என்ஜினீயரிங் பட்டதாரியான நாகேந்திரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், வேலை கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த நாகேந்திரன் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அவரை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு துணையாக இருந்த அவருடைய தாயார், வீட்டிற்கு சென்று இருந்த நேரத்தில் நாகேந்திரன் மருத்துவமனையில் இருந்து வெளியேறி உள்ளார். நேற்று காலை அவர் சுடுகாட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்