நாகர்கோவிலில் பரபரப்பு 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

நாகர்கோவிலில் கணவர் மதுகுடித்து விட்டு தகராறு செய்ததால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-25 23:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி அறுகுவிளை சுடலைமாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார், தொழிலாளி. இவருடைய மனைவி மினி (வயது 27). இவர்களுக்கு ரிச்சர்ட் மோன் (5) என்ற மகனும், ரபிஷா மோள் (4) என்ற மகளும் உள்ளனர். பிரவீன்குமார் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே கணவரை மினி கண்டித்தார். எனினும் வீட்டில் தகராறு ஓய்ந்தபாடில்லை. அதோடு குடும்ப செலவுக்கும் பணம் இல்லாமல் மினி கஷ்டப்பட்டு வந்தார்.

விஷம் குடித்தனர்

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பிரவீன்குமார் வெளியே சென்றதும் மினி விபரீத முடிவு எடுத்தார். அதாவது, தினமும் கணவருடன் சண்டையிட்டு மனமுடைந்து போன மினி விஷம் குடித்தார். அதோடு தனக்கு பிறகு குழந்தைகள் அனாதை ஆகிவிட கூடாது என்று நினைத்த அவர் நெஞ்சை கல்லாக்கி கொண்டு தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார். தாய் ஏதோ உணவு தான் கொடுக்கிறார் என்று நினைத்து 2 குழந்தைகளும் விஷத்தை குடித்துள்ளனர்.

இதனையடுத்து விஷம் குடித்த 3 பேரும் மயங்கி விட்டனர். இதற்கிடையே வெகு நேரம் ஆகியும் மினியும், குழந்தைகளும் வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தாய் சாவு

பின்னர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் தாயும், 2 குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் மினி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். 2 குழந்தைகளுக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் விசாரணை

கணவர் மது குடித்து விட்டு தகராறு செய்ததால், 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்