சொத்துக்கு ஆசைப்பட்டு பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது வழக்குப்பதிவு

சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாக வாலிபர் மீது பட்டதாரி பெண் புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-11-30 22:30 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள இருக்கூர் ஊராட்சி வடக்கு வலசுபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி என்பவரது மகள் சந்தியா (வயது 23). பட்டதாரி. இவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது:-

ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் (25) என்பவர் கடந்த 4 மாதங்களாக என்னுடன் பேசி வந்ததார். திடீரென என்னை திருமணம் செய்துகொள்ள கேட்டார். அதற்கு நான் எனது பெற்றோரிடம் பெண் கேளுங்கள் என்று சொன்னேன். திடீரென கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி என்னை மோகனூர் வரும்படி போனில் அழைத்தார். மோகனூர் பஸ் நிலையம் சென்ற என்னை, பதிவு திருமணம் செய்த பின்பு தான் உங்கள் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் எனக்கூறி, மோகனூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று கையெழுத்து போடும் படி கூறி, பதிவு திருமணம் செய்து கொண்டார்.

வழக்குப்பதிவு

அதன் பிறகு நான் வீட்டில் இருந்தபோது எனது பெற்றோரிடம் இதுபற்றி கூறியுள்ளார். சொத்துக்கு ஆசைப்பட்டு அவர் என்னை ஏமாற்றி பத்திரிகை அடித்து அரசு அலுவலர்களையும் நம்ப வைத்து நம்பிக்கை மோசடி செய்துள்ளார். எனவே இளங்கோவன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சுப்பிரமணி, உறவினர் சண்முகம் உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதன்பேரில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்