மயிலாடுதுறையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் வழிப்பறி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

மயிலாடுதுறையில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணிடம் ரூ.59 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-12-01 22:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது45). இவருடைய தம்பி பாஸ்கரன் (40). குமார் மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு குமார், அவருடைய தம்பி பாஸ்கரன் (40), பாஸ்கரன் மனைவி ராஜேஸ்வரி (35) ஆகிய 3 பேரும் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டனர். குமார் அவரது வேறு ஒரு நிறுவனத்துக்கு சென்று விட்டார். பாஸ்கரனும், அவருடைய மனைவி ராஜேஸ்வரியும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். காமராஜர் சாலையில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர்.

காயம்

அவர்கள் திடீரென பாஸ்கரன், ராஜேஸ்வரி சென்ற மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். இதனால் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், ராஜேஸ்வரியிடம் இருந்த பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.59 ஆயிரத்து 500 இருந்தது. இந்த சம்பவத்தில் ராஜேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கணவருடன் சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் பணம் பறித்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்