திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2019-12-01 22:56 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவகல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விவசாயிகளும் நன்றி தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு வந்திருந்த திரளான விவசாயிகள் ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும், நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குளங்களை ஆழப்படுத்த வேண்டும், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.

மேலும் தடுப்பணைகள் கட்டவேண்டும், விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய பதில் அளித்து உடனடியாக தீர்வு காண வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி அதன் மீது விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குனர் பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரதாப்ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹெப்சூர் ரகுமான் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்