கிணத்துக்கடவில், தனியார் பஸ் மோதி வேன் கவிழ்ந்தது - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்

கிணத்துக்கடவில் தனியார் பஸ் மோதி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-02 23:00 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த குமாரபாளையம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது44). இவர் மில்கேட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (30). இவர்களுடைய மகன் சந்தோஷ் (3).

காளிதாஸ் தனது மனைவி மற்றும் மகனுடன் கிணத்துக்கடவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று காலை தனக்கு சொந்தமான வேனில் கோவை -பொள்ளாச்சி மெயின்ரோடு சர்வீஸ்சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த தனியார் பஸ் முன்னால் சென்ற வேன் மீது வேகமாக மோதியது .இதில் வேன் நடுரோட்டில் சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டிவந்த காளிதாஸ், அவருடைய மனைவி கலைவாணி, மகன் சந்தோஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் முத்துக்குமார் (25) மீது கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்