துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீச்சு

துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் உடலை சூட்கேசில் அடைத்து கடலில் வீசப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-03 22:30 GMT
மும்பை,

மும்பை மாகிம், மாக்தூம் ஷா பாபா மசூதி அருகே உள்ள கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்துகொண்டு இருந்தது. அதில் மனித கால் வெளியே நீண்டு கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் கடலில் மிதந்த சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். அப்போது, அதன் உள்ளே துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்ட நிலையில் ஆண் உடல் இருந்ததை கண்டு போலீசாா் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் சூட்கேசில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட தோள்பட்டை, கால் மற்றும் மா்ம உறுப்பு பகுதியை மீட்டனர். பின்னர் அந்த உடல் உறுப்புகளை சயான் மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்டவர் யார்?, அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கடலில் வீசிச்சென்ற கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்