குடும்ப தகராறில் அடுத்தடுத்து உயிரை மாய்த்தனர்: மனைவி இறந்து கிடப்பதை பார்த்து தொழிலாளியும் தூக்குப்போட்டு தற்கொலை

வத்தலக்குண்டு அருகே குடும்ப தகராறில் மனைவி தற்கொலை செய்து இறந்து கிடப்பதை பார்த்து, தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2019-12-04 23:00 GMT
வத்தலக்குண்டு, 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (36). இவர்களுக்கு தேவி என்ற மகள் உள்ளார். அவரை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இருளப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கும், மனைவி பாண்டியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருளப்பன், மது குடித்துவிட்டு வீட்டு செலவிற்கு பணம் கொடுக்கவில்லை. இதனை பாண்டியம்மாள் தட்டி கேட்டுள்ளார். அப்போது கணவன்–மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருளப்பன் வெளியே சென்றுவிட்டார்.

இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாதபோது பாண்டியம்மாள் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த இருளப்பன், தனது மனைவி உயிரிழந்து கிடப்பதை கண்டு மிகுந்த வேதனை அடைந்தார். இதனால் விரக்தியடைந்த இருளப்பனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் அன்றைய தினம் இரவு பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் இருளப்பன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 2 பேரும் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட பாண்டியம்மாள், இருளப்பன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்களது மகள் தேவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்–மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்