மோட்டார் சைக்கிள் மோதி ஊழியர் சாவு: விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

மோட்டார் சைக்கிள் மோதியதில் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-12-04 23:00 GMT
பெரம்பலூர்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா கிழக்கு ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிவேல் (வயது 45). இவர் பெரம்பலூரில் உள்ள இனிப்பு மற்றும் பலகார கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஜோதிவேல் கடையில் வேலை முடிந்து பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு கணபதி நகரில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஜோதிவேல் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்நிலையில் நேற்று காலை ஜோதிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விபத்தை ஏற்படுத்தி சென்றவரை போலீசார் இதுவரை கண்டு்பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜோதிவேல் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிழக்கு ராஜபாளையம் கிராம மக்கள் நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள், விபத்து நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விபத்து ஏற்படுத்தியவரை உடனடியாக கண்டுபிடித்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ஜோதிவேலுக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்