திருவண்ணாமலையில் மொபட் மீது லாரி மோதல்; தம்பதி பலி
திருவண்ணாமலையில் மொபட் மீது லாரி மோதியதில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 35). அவருடைய மனைவி இன்பமணி (30). இவர், நார்த்தம்பூண்டி கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் மொபட்டில் திருவண்ணாமலையில் இருந்து மல்லவாடி நோக்கி சென்றனர்.
திருவண்ணாமலை தீபம் நகர் டோல்கேட் அருகே செல்லும் போது திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து ஊசாம்பாடி மண்ணை கிராமத்திற்கு ரேஷன் அரிசி ஏற்றிச்சென்ற லாரி திடீரென மொபட்டின் பின்னால் மோதியது. இதில் கணவன் – மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், கணவன், மனைவி இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.
இதற்கிடையில் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியையும், மொபட்டையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.