கள்ளக்குறிச்சியில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-08 22:15 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வேலு மகன் வீரா. இவரும், திருப்பூர் கர்வபாளையத்தை சேர்ந்த திவ்யா (வயது 18) என்பவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை சுரேஷ் வீராவின் வீட்டுக்கு வந்து அங்கிருந்த தனது மகளிடம் திருப்பூருக்கு வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து திவ்யா தனது தந்தையிடம் போனில் பேச முயன்றார்.

ஆனால் அவர் பேச மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து வீட்டுக்கு சென்றபோதும், திவ்யாவிடம் அவரது பெற்றோர் பேசவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மன முடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீரா அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்