காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை பலி

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2019-12-08 23:00 GMT
காவேரிப்பட்டணம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சிவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் மெகினன் (வயது 2). இவர்களின் வீடு அருகில் கழிவுநீர் செல்வதற்காக 10 அடி ஆழத்தில் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த கழிவுநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. அந்த தொட்டியில் தற்போது ஏரியின் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மெகினன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர்.

சாவு

அந்த நேரம் ஏரி தண்ணீர் தேங்கி இருக்க கூடிய கழிவுநீர் தொட்டி மூடப்படாத நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது மெகினன் உள்ளே தண்ணீரில் மூழ்கியபடி கிடந்தான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் குழந்தையை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை மெகினன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதை கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சோகம்

அதன்பேரில் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்