நெல்லையில் கார்- ஆட்டோ மோதல்; பெண் பலி - 4 பேர் படுகாயம்

நெல்லையில் கார், ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-09 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பொட்டலை அடுத்த மலையன்குளத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி கனகமணி (வயது 55). இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்களுடன் வயலில் நாற்று நடும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று அதிகாலை 8 பெண்களுடன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அசுரம் கிராமத்துக்கு நாற்று நடும் பணிக்காக ஆட்டோவில் புறப்பட்டு சென்றார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த பூரண பரமேசுவரன் (27) என்பவர் ஓட்டினார்.ஆட்டோ காலையில் நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள தெற்கு புறவழிச்சாலையில் வந்தது. அந்த நேரத்தில் நெல்லை சந்திப்பு பாலபாக்கிய நகரை சேர்ந்த ஒருவர் தனது காரில் புதிய பஸ்நிலையம் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

மேலப்பாளையம் சிக்னலில் ஆட்டோ கடக்க முயன்றது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ அங்கிருந்த போலீஸ் நிழற்குடையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த கனகமணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மலையன்குளம் பகுதியை சேர்ந்த சிங்காரி (36), காளியம்மாள் (70), ராசம்மாள் (50), இசக்கியம்மாள் (75) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், பலியான கனகமணி உடலை மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட் டனர். அவர்களில் சிங்காரி, காளியம்மாள் ஆகிய இருவரும் அவசர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்