திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் திருமங்கையாழ்வார் தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா

திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் திருமங்கையாழ்வார் தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-12-12 22:30 GMT
ஆக்கூர்,

சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாணரெங்கநாதர் கோவிலில் திருமங்கையாழ்வார் கார்த்திகை உற்சவம் கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் உற்சவர் வயலாளி மணவாள பெருமாள், தேவியர்களுடன் கூடிய சிந்தனைக்கினியான் பெருமாள், குமுதவல்லியுடன் கூடிய திருமங்கையாழ்வார் ஆகிய சாமிகளுக்கு நடந்த திருமஞ்சன பூஜையையொட்டி மஞ்சள்பொடி, திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்கார, ஆராதனை நடந்தது.

இதேபோல் கல்யாணரெங்கநாதர், அமிர்தவல்லி தாயார், ஆண்டாள், ஹிரண்ய நரசிம்மர், யோக நரசிம்மர் உள்ளிட்ட சாமிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு ஆராதனை நடந்தது. இதனையடுத்து நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா

தொடர்ந்து திருமங்கையாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சி நடந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டு இருந்த பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், ஆய்வாளருமான மதியழகன், செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்