தம்மம்பட்டியில் மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை

தம்மம்பட்டியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி இல்லாததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-12-12 22:30 GMT
தம்மம்பட்டி, 

தம்மம்பட்டி 5-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சுந்தரத்தின் மகள் தீபிகா (வயது 20) பி.ஏ. பட்டப்படிப்பு படித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தீபிகா, தனது தந்தை சுந்தரத்திடம் மேல் படிப்பான பி.எட். படிக்க கல்லூரியில் சேர்க்குமாறு கேட்டுள்ளார்.

சுந்தரம் நமக்கு வசதி இல்லை என்பதால் மேற் படிப்பு படிக்க வேண்டாம் என்று தீபிகாவிடம் கூறியுள்ளார். மேலும் தீபிகாவுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய தந்தை முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தீபிகா, மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சேர்க்காததால் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை சாப்பிட்டு விட்டார். இதனால் கடந்த சில நாட்களாக சோர்வாக அவர் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீபிகா உடல்நிலை திடீரென மோசம் அடைந்ததால் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது தான் கடந்த 8-ந் தேதி விஷம் சாப்பிட்டதை கூறியுள்ளார். உடனே தீபிகாவை அவருடைய பெற்றோர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தீபிகா இறந்தார்.

பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்