உத்தமபாளையத்தில், மில் தொழிலாளி வெட்டிக்கொலை

உத்தமபாளையத்தில் மில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-12-12 22:00 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள பி.டி.ஆர் காலனி அருகே கடந்த 9-ந்தேதி இரவு வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்துடன் கிடந்தார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் கிடந்த அந்த வாலிபரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அந்த வாலிபர் உத்தமபாளையம் அப்பாச்சிபிள்ளை தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் நாகேந்திரன் (வயது 20) என்பதும். தேனியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்தநிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். எனவே போலீசார் இந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர். நாகேந்திரன் எதற்காக அரிவாளால் வெட்டப்பட்டார்?, அவரை வெட்டிய மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்