மணப்பாறை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஓட்டல் உரிமையாளர் மனைவி உள்பட 2 பேர் பலி
மணப்பாறை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஓட்டல் உரிமையாளர் மனைவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.
மணப்பாறை,
தேனி என்.ஆர்.டி.நகர் பகுதியை சேர்ந்தவர் இரணியன்(வயது 67). இவர் தேனியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சரோஜா (61). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் அங்கிருந்து சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை, நாகராஜ் (67) என்பவர் ஓட்டினார்.
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி சரோஜாவும், நாகராஜும் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயமடைந்த இரணியன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.