தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர் கைது பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவில்பட்டியில் தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனியார் நிறுவன மேற்பார்வையாளர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திரா நகர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் கட்டுமான நிறுவன உரிமையாளர் முகேஷ் ராசுகுட்டியுடன் கோவில்பட்டி இந்திரா நகரில் நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் கத்தியைக் காட்டி மிரட்டி, சதீஷ்குமார் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை கழட்டி தருமாறு மிரட்டினார். உடனே சதீஷ்குமார், ராசுகுட்டி ஆகிய 2 பேரும் ‘திருடன் திருடன்‘ என்று கூச்சலிட்டனர்.
கைது
இதையடுத்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், அந்த மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர், பொதுமக்களிடம் சிக்காமல் இருளில் தப்பி ஓடினார். எனினும் பொதுமக்கள் சிறிது தூரம் விரட்டிச் சென்று, அந்த நபரை மடக்கிப்பிடித்து, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், நகை பறிக்க முயன்றவர் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் வினோத்குமார் (26) என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.