நெய்வேலியில், மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஜவுளிக்கடை உரிமையாளர் சாவு

நெய்வேலியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2019-12-25 03:15 IST
நெய்வேலி, 

புவனகிரி அருகே உள்ள வேளங்கிபட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் சங்கர் (வயது 45). தற்போது வடக்குத்து அருகே வேலுடையான்பட்டு நகரில் வசித்து வரும் இவர் நெய்வேலி மெயின் பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை நெய்வேலி டவுன்‌ஷிப் தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகள் மதிவதனியை(12) மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

நெய்வேலி 1-வது வட்டம் இந்திரா காந்தி சாலையில் வந்து கொண்டிருந்த போது எதிரே மாற்று குடியிருப்பை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மாட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் படுகாயமடைந்த சங்கர், மதிவதனி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் சங்கரின் நிைலமை மோசமானதால், அவரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கீதா(35) கொடுத்த புகாரின் பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்