அச்சரப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

அச்சரப்பாக்கம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியார் நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.;

Update:2019-12-25 03:36 IST
அச்சரப்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). இவர் மனைவி ரமணி, மகள் தீனப்பிரியா (4), 1½ வயது மகன் தருண் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது பெற்றோர் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மாலகரத்தில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை அய்யப்பன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வெண்மாலகரம் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார். இரும்புலி கூட்ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மணிகண்டன் என்பவரது மோட்டார்சைக்கிளும், அய்யப்பனின் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிகண்டனுக்கு கால்கள் முறிந்தன.

இதுபற்றி தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனுக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்