வக்கோலா மேம்பாலத்தில் பயங்கர விபத்து 25 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி

வக்கோலா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 25 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலியானார்.

Update: 2019-12-24 22:45 GMT
மும்பை, 

வக்கோலா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 25 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலியானார்.

மேம்பாலத்தில் விபத்து

மும்பை வடலாவை சேர்ந்தவர் ஓம்கார் (வயது25). புகைப்பட கலைஞரான இவர், நேற்று முன்தினம் மலாடில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க தனது நண்பர் ரோகித்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்த மோட்டார் சைக்கிளை ஓம்கார் ஓட்டி வந்தார். வக்கோலா மேம்பாலத்தில் சாலை விதிமுறை மீறி வந்த ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த ரோகித் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு 25 அடி உயரத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் விழுந்தார்.

வாலிபர் பலி

இதில் படுகாயமடைந்த ரோகித் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஓம்கார் படுகாயமடைந்தார். விபத்து நடந்த உடனே ஆட்டோவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பிஓடிவிட்டார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த ஓம்காரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோவை பறிமுதல் செய்து டிரைவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்