16 வயது மாணவியுடன் திருமணம்; போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது - உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் சிக்கினார்

16 வயது உடைய பள்ளி மாணவியை திருமணம் செய்த கொத்தனாைர போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் சிக்கினார்.

Update: 2019-12-25 22:45 GMT
கம்பம்,

கம்பம் பகுதியை சேர்ந்த 16 வயது உடைய பள்ளி மாணவியும், அவருடைய தாயும் கடந்த 14-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றனர். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் அந்த மாணவியின் தந்தை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் அந்த மாணவி தாயுடன் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மயிலாடுதுறை கூரைநாடு காவேரிக்கரையை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் மணிகண்டன் (வயது 28) அந்த மாணவியை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ேபாக்சோ சட்டத்தின் கீழ் கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயையும் கைது செய்தனர். மேலும் மணிகண்டனின் தந்தை அன்பு, உறவினர் முருகன், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்