கருங்கல் அருகே, கொத்தனார் கொலை வழக்கில் வாலிபர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

கருங்கல் அருகே கொத்தனார் கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விவரம் வருமாறு:-

Update: 2020-01-03 22:45 GMT
கருங்கல், 

கருங்கல் அருகே சகாயநகர் கல்லுதறை பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 45). இவர் வெளிநாட்டில் கொத்தனராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி இரவு படுவு பகுதியில் ஒரு குளத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அலெக்சாண்டரை வழிமறித்து அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சகாயநகர் பகுதியை சேர்ந்த சுனில் (23) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அலெக்சாண்டருக்கும், எனது நண்பரான ஜெயகரின் தாயாருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை ஜெயகர் கண்டித்தார். ஆனால் அதை அலெக்சாண்டர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயகர், அலெக்சாண்டரை கொலை செய்ய திட்டமிட்டார். ஜெயகருக்கு உதவியாக நண்பர்களான நானும் (சுனில்) மற்றும் ஜினோ, பீட்டர் ஆகிய 3 பேரும் சென்று அலெக்சாண்டரை கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள ஜெயகர் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்