பாபநாசம், மணிமுத்தாறு பகுதியில் மழை

பாபநாசம், மணிமுத்தாறு உள்பட ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Update: 2020-01-05 22:15 GMT
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் வடகிழக்கு பருவமழையால் நிரம்பின. மணிமுத்தாறு அணை மட்டும் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் பருவமழை காலம் முடிவடைந்திருக்கும் சூழ்நிலையில் மீண்டும் பரவலாக மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, பாபநாசம், சேரன்மாதேவி பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் சிவகிரி பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்டத்தில் அம்பையில் 21 மில்லி மீட்டர், சேரன்மாதேவியில் 4 மி.மீ., தென்காசி மாவட்டத்தில் ஆய்குடியில் 5.20 மி.மீ., சிவகிரியில் 52 மி.மீ., அடவிநயினார் அணை பகுதியில் 5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நேற்று பகலிலும் பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் 3 மி.மீ., மணிமுத்தாறு அணை பகுதியில் 12 மி.மீ., பாளையங்கோட்டையில் 1.40 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில், 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 142.05 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 442 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 762 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 155.41 அடியாக உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 114.33 அடியாக உள்ளது. அணைக்கு 169 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 475 கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்