குடோனை வாடகைக்கு எடுத்து செம்மரக்கட்டைகள் பதுக்கிய 5 பேர் சிக்கினர்
மங்களூரு அருகே குடோனை வாடகைக்கு எடுத்து செம்மரக்கட்டைகள் பதுக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செம்மரக்கட்டைகள் உள்பட ரூ.2.20 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஜோகட்டே சாலையில் பைக்கம்பாடி தொழிற்பேட்டை அமைந்துள்ளது. அங்கு வீனஸ் எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமாக குடோன் அமைந்திருக்கிறது. அந்த குடோனை சிலர் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக அங்கு செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மங்களூரு புதிய துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் பனம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பனம்பூர் போலீசார், ரவுடி ஒழிப்பு போலீசாருடன் குறிப்பிட்ட அந்த குடோனுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது பிடிபட்டவர்கள் பெரமனூர் கல்லப்பட்டணா பகுதியைச் சேர்ந்த சேக் தப்ரேஷ்(வயது 36), பாரூக்(48), உசேன்(46), காவூர் அருகே பரசுராம் நகரைச் சேர்ந்த ராகேஷ் செட்டி(44), தொக்கொட்டு பகுதியைச் சேர்ந்த லோகித்(35) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து அங்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் அந்த செம்மரக்கட்டைகளை கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செம்மரக்கட்டைகள், 2 கார்கள், ஒரு சரக்கு ஆட்டோ, 7 செல்போன்கள் என மொத்தம் ரூ.2.20 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.