அரியலூரில் குடியரசு தின விழா: தேசிய கொடியை கலெக்டர் ரத்னா ஏற்றினார்

அரியலூரில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் ரத்னா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

Update: 2020-01-26 22:30 GMT
அரியலூர், 

அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசு தின விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான புறாவை பறக்கவிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து கலெக்டர் ரத்னா சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

மேலும், வீரதீர செயல் புரிந்த 29 போலீசாருக்கு முதல்-அமைச்சர் வழங்கிய பதக்கங்களையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 180 பேருக்கு விருதுகளையும் கலெக்டர் ரத்னா வழங்கினார். நெகிழி ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 12 மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். விழாவில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் மொத்தம் 51 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 101 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி, கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி, செந்துறை புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லாபுரம் ஹெலன் கெல்லர் செவித்திறன் குறைபாடுடையவர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளின் தேசப்பற்று தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருவதை நினைவு கூறும் வகையில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். பார்வையாளர்களை கவர்ந்த கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் விளையாட்டுத் திடல் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

குடியரசு தின விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், திட்ட இயக்குனர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜ், (மகளிர் திட்டம்) ஜெயராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது, பொறுப்பு) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குடியரசு தினத்தையொட்டி நேற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரியலூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம், அரியலூர் நகராட்சி அலுவலகம், ரெயில்வே போலீஸ் நிலையம், ஜெயங்கொண்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம், கிளை நீதிமன்றத்திலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களும், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி மன்ற தலைவர்களும் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் அறச்செல்வி தேசிய கொடி ஏற்றி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை வழங்கினார். பின்னர் துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இதில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உள்பட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்